தென்காசி : தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இம்மாதம் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த உள்ளாட்சித்தேர்தலில் இளைஞர்களிடம் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான படித்த இளைஞர்கள் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அதன்படி, தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அடுத்த திப்பனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதுநிலைப் பொறியியல் பட்டதாரி, தங்கராஜ்.
இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் இயக்குநராகப் பணிபுரிகிறார். இவர் இந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டுத் தலைவர் என்ற அங்கீகாரத்துடன் தனது சமூக பணியைத் தொடர விரும்பியுள்ளார்.
தேர்தல் அறிக்கை வெளியிட்டு அசத்தல்
இதையடுத்து, தங்கராஜ் தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நிர்வாகம், சுகாதாரம், குடிநீர், பெண் கல்வி என ஐந்து பிரிவுகளில் பல்வேறு வாக்குறுதிகளை வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக நிர்வாகத்தில் மாதம் ஒருமுறை வரவு செலவு கணக்குகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும்.
ஊழல் தடுப்புக்குழு அமைக்கப்படும். மாதமொருமுறை வார்டு சபைக்கூட்டம் நடத்தப்படும். நீட் பயிற்சி மையம் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டு, மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே மருத்துவம் சார்ந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்' என்று உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து தங்கராஜைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, 'நான் கடந்த 10 ஆண்டுகளாக கிராமசபை கூட்டத்தில் கலந்து வருகிறேன்.
ஊராட்சித் தலைவரால் என்ன சாதிக்க முடியும் என்பது நன்றாகத் தெரியும். குறிப்பாக வெளிப்படையான நிர்வாகம் கொண்டுவருவது தான் எனது இலக்கு. எனவே தான், எனது வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளேன்' என்று தெரிவித்தார்.
இளைஞர்கள் மாற்றத்தை விரும்பி, இதுபோன்ற பல்வேறு சவாலான அறிவிப்புகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.