நெல்லை: தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பணத்துடன் கூடிய பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2,500 ரூபாய் பணம், கரும்பு அரிசி மற்றும் பொங்கலுக்குத் தேவையான பொருள்களான முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதற்கிடையில், கடந்த வாரம் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கிவைத்தார். இந்நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசுத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் இன்று மாவட்டம் முழுவதும் உள்ள 796 நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கியது. நெல்லையில் உள்ள 4 லட்சத்து 57 ஆயிரத்து 98 குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது.
இதையடுத்து காலை முதல் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுகளைப் பெற வருகை தந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த இங்கு டோக்கன் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.
மேலும், ஸ்மார்ட் கார்டு மூலம் பயனாளிகளின் பெயர், விபரங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களிடம் கையெழுத்து வாங்க பெற்று 2,500 ரூபாய் பணம் மற்றும் பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் உரிய கரோனோ பாதுகாப்பு நடைமுறை பின்பற்றப்படுகிறது. குறிப்பாக பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர் சி.வி. சண்முகம்!