திருநெல்வேலி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் நெல்லை டவுன் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவின் முதல் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமைந்தது திருநெல்வேலி மாவட்டம்தான். எம்ஜிஆருக்குப் பிறகு 16 ஆண்டுகளாக முதலமைச்சராக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா தொலைநோக்குத் திட்டங்களைக் கொண்டுவந்தார்.
இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று கருணாநிதி செய்த சதியைத் தாண்டி அதிமுகவை மாபெரும் கோட்டையாக ஜெயலலிதா உருவாக்கினார். ஜெயலலிதா ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் 100 விழுக்காடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு ஐந்தரை லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்தார். பத்து ஆண்டுகள் தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெற்றது. 2021ஆம் ஆண்டிலும் அதிமுக ஆட்சிதான் அமையும் சூழல் நமக்கு ஏற்பட்டது.
ஆனால், எப்பவும்போல திமுக அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தார்கள், நான் முதலமைச்சரானால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று ஸ்டாலின் சொன்னார். நீட் தேர்வு ரத்துசெய்ய வேண்டும் என்றால் சட்டப்பேரவையில் மசோதா கொண்டுவந்து அங்கீகரிக்கப்பட்டு குடியரசுத் தலைவர் கையெழுத்துப் போட வேண்டும்.
முதலமைச்சர் கையெழுத்துப் போட்டால் எப்படி நீட் ரத்துசெய்ய முடியும்? தாய்மார்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்று சொன்னார், பத்து மாதம் ஆகிவிட்டது இன்னும் கொடுக்கவில்லை.
மாணவர்களின் கல்விக் கடன் ரத்து எனச் சொன்னார்கள் ரத்துசெய்யவில்லை. ஐந்து பவுன் நகைத் தள்ளுபடி என்ற வாக்குறுதியை நம்பி பாவம் மக்கள் குழந்தைகள் கழுத்தில் காதில் கிடந்ததைக் கழற்றி அடகுவைத்தார்கள்.
50 லட்சம் பேர் அடகு வைத்தார்கள், தேர்தலுக்குப் பிறகு தகுதியுள்ளவர்களுக்கு மட்டும்தான் தள்ளுபடி என்று சொல்கிறார்கள். 13 லட்சம் பேர்தான் தகுதியுடையவர்கள் என்று கணக்கெடுத்துள்ளனர். எனவே 37 லட்சம் பேர் கடனாளியாக உள்ளனர். இதற்கு திமுகதான் பொறுப்பு.
இந்த ஆட்சியில் எந்தத் திட்டமும் வரவில்லை என்ன செய்ய வேண்டும் என்ற நிர்வாக குழப்பத்தில் உள்ளனர். எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஒரு அவல ஆட்சிதான் நடைபெறும். அதிமுக ஆட்சியில் தரமான பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
அதுதான் நல்ல ஆட்சிக்கு அடையாளம். இப்போது திமுக கொடுத்துள்ள பொங்கல் தொகுப்பை சாப்பிடவே முடியாது, தரமற்ற பொருள்களை மக்களுக்கு விநியோகித்த அவல அரசுதான் திமுக. இந்தப் பொருள்களை மாட்டுக்கு வைத்தால் மாடே முறைக்கிறது திமுகவின் அவல ஆட்சியைப் பார்த்து.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை யார் ஆட்சி நல்ல ஆட்சி என்று எடை போட்டுப் பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு ஜெயலலிதாதான் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்தார். இந்தத் தேர்தல் தொண்டர்கள் நிற்கக் கூடிய தேர்தல் அவர்களை வெற்றியடைய செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.
ஜெயலலிதா கனவு நனவாக நல்ல வாய்ப்பாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. மக்களை ஏமாற்றி மக்கள் விரோத அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே வரும் தேர்தலில் ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும். உறுதியாக அனைவரும் 100/100 வெற்றிபெறுவார்கள் என்ற சாதகமான நிலை உருவாகியுள்ளது” என்றார்.
கூட்டத்துக்குப் பிறகு மம்தா பானர்ஜி தலைமையிலான எதிர்க்கட்சிகள் மாநாட்டிற்கு ஸ்டாலினுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது குறித்து கேட்டபோது, “முதலில் 10 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தமிழ்நாடு மக்களுக்கு சொன்னதைச் செய்துவிட்டு அதன் பிறகு அகில இந்திய அரசியலில் கால்பதிக்கட்டும்" என்றார்.
தொடர்ந்து, சட்டப்பேரவையை முடக்கினாலும் 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெறுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து கேட்டபோது, “அது அவரது ஆசையாக இருக்கட்டும்” என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: எய்ம்ஸ் செங்கலை மோடியிடமே கொடுத்துவிட்டேன் - உதயநிதி நக்கல்