திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வருகின்ற 27ஆம் தேதி பெரியார் சமூக நீதி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி மூலம் மாநாட்டில் உரையாற்ற இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கும் வழக்கறிஞர் ஜோதி என்பவர் நக்சலைட் என்பதால் மாநாட்டை தடை செய்ய வேண்டும் என இந்து முன்னணி நிர்வாகிகள் நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் பரபரப்புப் புகார் அளித்தனர்.
கேரளாவில் வேல்முருகன் என்ற நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவரது இறுதிச் சடங்கில் ஜோதி கலந்து கொண்டதாகவும், எனவே அவரும் ஒரு தீவிரவாதி என்றும் இந்து முன்னணியினர் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ஜோதி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பெரியார் சமூகநீதி குறித்து பேசி 100 ஆண்டுகள் ஆனதையொட்டி சமூக நீதி மாநாடு நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ஆனால், இந்த மாநாட்டை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு சமூக நீதிக் கொள்கையை பிடிக்காத சில அமைப்பினர் என் மீது அவதூறு பரப்பி வருகின்றனர்.
கேரளா காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வேல்முருகன் என்பவர் இறப்புக்கு சென்று வந்ததால் நானும் ஒரு நக்சலைட் தீவிரவாதி என்று அவர்கள் சொல்லி வருகிறார்கள்.
நான் ஒரு வழக்கறிஞர், அவர்கள் கூறுவது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு. வேல்முருகனின் சகோதரர் ஒரு வழக்கறிஞர், எனவே அதன் அடிப்படையில் நான் வேல்முருகனின் இறப்புக்கு சென்றேன்" என விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: புறநகர் மின்சார ரயிலில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி!