திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் முப்பிடாதி. கூலி தொழிலாளியான இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர் வண்ணாரப்பேட்டை தெருவில் தாமிரபரணி நதிக்கரையில் வீடுகட்டி 12 வருடங்களுக்கு மேலாகக் குடியிருந்து வருகிறார். மேலும் இவரது உறவினர் என்று கூறப்படும் அண்ணாமலை, இவர் வீட்டின் அருகே வசித்து வருகிறார்.
அண்ணாமலை ஆடு வளர்க்கும் தொழில் உடன் கூலி தொழிலும் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முப்பிடாதி தனது வீட்டை சீரமைத்தபோது அண்ணாமலைக்கு சொந்தமான இடத்தைச் சேர்த்து வீடு கட்டியதாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் அண்ணாமலை தனது ஆடுகளை பட்டியில் கட்டாமல் காலை நேரத்தில் முப்பிடாதி வீட்டு அருகே உள்ள காலி இடத்தில் அவிழ்த்துவிட்டு செல்வதால் வீட்டில் உள்ள பொருள்களை அடிக்கடி நாசம் செய்து விடுவதாகவும் அதன் காரணமாக அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்படுவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முப்பிடாதி வேலைக்குச் சென்ற நேரத்தில், ஆடுகள் வீட்டுக்குள் வந்து செல்லவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அருகேயிருந்த கட்டையால் முப்பிடாதியை அண்ணாமலை தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய முப்பிடாதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல் துறையினர் அண்ணாமலையை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கடலூர் மாணவன் கொலை வழக்கில் மேலும் ஐவர் கைது