கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடு அரசு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மகளிரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவிகள் அளிக்க உத்தரவிட்டது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மகளிரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மாவட்ட மகளிர் குழுக்களுக்கு ரூ. 1.50 கோடி மதிப்பில் கடன் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
வண்ணாரப்பேட்டை மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையேற்றார். அதில் கலந்துகொண்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, 379 பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.
முன்னதாக, சத்திரம்புதுக்குளத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் உபரிநீர் கால்வாய்களை மறுசீரமைப்பு செய்யும் குடிமராமத்துப் பணிகளையும் அவர் தொடக்கி வைத்தார்.