திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே சீலாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி முத்து. இவர் குடி பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது மனைவிக்கும் இவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதனால், இவரது மனைவி இவரை பிரிந்து கடந்த ஆறு மாத காலமாக பணகுடியில் வசித்து வருகிறார். முத்துவுடன் அவரது மகன் வேல்முருகன் மட்டும் வசித்து வந்துள்ளார்.
முத்துவின் மகன் வேல்முருகன் வள்ளியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த மூன்று தினங்களாக வேல்முருகன் கல்லூரிக்கு வராததால் அவரது நண்பர்கள் செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் அவரது செல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அவரது வீட்டிற்கே சென்று நேரில் பார்த்துள்ளனர். அப்போது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகனின் நண்பர்கள், உடனடியாக இராதாபுரம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது வேல்முருகன் தலையில் பலத்த காயத்துடன் இறந்த நிலையில் கிடந்தார்.
இதனையடுத்து, இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேல்முருகனை அவரது தந்தை முத்து அடித்து கொன்றுவிட்டு கும்பிகுளம் அருகே போதையில் உளறி கொண்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் தனது மகனை அடித்து வெட்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.