திருநெல்வேலி: 2011ஆம் ஆண்டு நடிகர்கள் விஷால், ஆர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் அவன் இவன் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் திருநெல்வேலியில் புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில், சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறாக சித்திரித்து காட்சிகள் இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்து சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ். தீர்த்தபதி மகன் சங்கராத் மத்ஜன் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு 2018ஆம் ஆண்டு முதல் இயக்குநர் பாலா, ஆர்யா இருவருக்கும் தனித்தனி வழக்காக பிரிக்கப்பட்டு அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்ந நிலையில் கடந்த மார்ச் 29ஆம் தேதி ஆர்யா சிங்கம்பட்டி வாரிசு சங்கர் ஆத்மஜனிடம் வருத்தம் தெரிவித்ததையடுத்து ஆர்யா மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இயக்குநர் பாலா மீதான வழக்கு மட்டும் நடைபெற்த நிலையில் நேற்று முன்தினம் (ஆக.17) வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இயக்குநர் பாலா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நேற்று (ஆக.18) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்த நிலையில் நேற்றும் அவர் ஆஜராகவில்லை.
இந்ந நிலையில் இயக்குநர் பாலா இன்று (ஆக.19) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இயக்குநர் பாலா அவசர அவசரமாக திருநெல்வேலி வந்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து நீதிபதி அவன் இவன் திரைப்பட அவதூறு வழக்கிலிருந்து இயக்குநர் பாலாவை விடுவித்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து பாலாவின் வழக்கறிஞர் முகம்மது உசேன் கூறுகையில், "சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும் சொரிமுத்து அய்யனார் கோயில் குறித்தும் அவதூறாக காட்சி சித்தரிக்கப்படவில்லை என்பதற்கு நாங்கள் வைத்த வாதத்தை ஏற்று குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இயக்குனர் பாலாவை வழக்கிலிருந்து விடுவித்துள்ளார்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தடுப்பூசி போட்டும் கரோனா வந்துடுச்சு: புலம்பும் எவர்கிரீன் நாயகி நதியா