தேனி: புகழ் பெற்ற கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை (மே 10) தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் நான்காவது நாளான இன்று (மே 13) தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக இன்று காலை கோயிலில் இருந்து அம்மன் தேருக்கு எழுந்தருளி அம்மனுக்கு சக்தி கொடுக்கும் பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் இன்று மாலை 4 மணி முதல் தொடர்ச்சியாக அனைத்து மண்டகப்படி தாரர்களும் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். அவர்களுக்கு கோயில் பாரம்பரிய வழக்கப்படி பட்டங்களும் மாலைகளும் சூட்டப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டது.
சரியாக மாலை 6.05 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தொடங்கினர். இந்த நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத், காவல் துறை தென்மண்டல ஐஜி மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
இன்று முதலாவது நாளாக தேரடியில் இருந்து இழுத்து வரப்பட்ட தேர் அம்மன் சன்னதி முன்பாக நிலை நிறுத்தி வைக்கப்பட்டதுடன் முதலாவது நாள் தேரோட்டம் நிறைவுபெற்றது. நாளை (மே 14) முதல் படிப்படியாக ஒவ்வொரு படிநிலையாக நகர்த்தி வைக்கப்பட்டு வரும் செவ்வாய் அன்று தேர் தேரடியில் நிலை நிறுத்தப்படும்.
இந்த தேரோட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் தேரை வடம்பிடித்து இழுப்பதற்காகவும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். சுமார் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியிலும் தீவிரப் படுத்தப்பட்டன.
இதையும் படிங்க: அத்திவரதர் புகழ் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்; தங்க சிம்ம வாகனத்தில் வீதி உலா