தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது ஏற்பட்ட குளறுபடி காரணமாக 13 வாக்குச்சாவடி மையங்களுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து இன்று நாடு முழுவதும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, சூலூர் உள்பட நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல், 13 வாக்குச்சாவடி மையங்களுக்கு மறுவாக்குப்பதிவும் நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில் தேனி மக்களவைத் தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம், பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வடுகபட்டி ஆகிய இரு வாக்குச்சாவடி மையங்களில் தற்போது வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
பாலசமுத்திரம் கம்மவார் சரஸ்வதி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி நிலையத்தில் உள்ள பாகம் எண் 67-க்குரிய மையம், வடுகபட்டி சங்கரநாராயணன் நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி நிலையத்திற்குட்பட்ட பாகம் எண் 197-க்குரிய மையங்களில் தற்போது மறு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
வாக்களிக்கவரும் வாக்காளர்களுக்கு இடது கை நடு விரலில் அடையாள மை வைக்கப்படுகிறது. மத்திய துணை பாதுகாப்புப் படை, தமிழ்நாடு காவல் துறை உட்பட மூன்றடுக்கு பாதுகாப்பு இங்கு போடப்பட்டுள்ளது.