கரூர் மாவட்டம் க. பரமத்தி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிவருபவர் ரமாதேவி. பொதுமக்களுடன் நல்லுறவு மேற்கொள்வது தொடங்கி, பொதுமக்கள் மிக எளிமையாக காவல் நிலையத்தை அணுகுவது வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும்வகையில் காவலர் குடியிருப்பில் வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைத்து பசுமை குடியிருப்பாக மாற்றியுள்ளார். காவல் நிலையத்தின் முன்புறம் வண்ண பூச்செடிகள், மரங்களை நட்டு தோற்றத்தை மாற்றி மக்களைக் கவர்ந்துவருகிறார்.
பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திவருகிறார். தற்போது க. பரமத்தி வாரச்சந்தையில் குழந்தைகள் வன்கொடுமை, பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத் துண்டுப்பிரதிகளை வழங்கி பேசினார்.
இது குறித்து காவல் ஆய்வாளர் ரமாதேவி கூறுகையில், “பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் எது, பாலியல் சீண்டல் எது என்று பெற்றோர் சொல்லிக் கொடுக்க வேண்டும். இளம் சிறார்கள்கூட இன்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
குழந்தைகளிடம் அனாவசியமாக அலைபேசியை கொடுத்து விளையாட்டு காட்டுபவர்களிடமிருந்து குழந்தைகளை விலகியிருக்க அறிவுரை வழங்க வேண்டும். குழந்தைகள் நலனில் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும்” எனப் பேசினார்.
இதையும் படிங்க : பரப்புரைக்கு சரக்கு வாகனத்தில் மக்களை ஏற்றிவந்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து