தேனி: பெரியகுளம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் தெரு நாய்கள் கும்பலாக செல்வதும், சாலையில் செல்பவர்களை விரட்டுவதும், சிறுவர்களை விரட்டுவதுமாக இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இதனால் பெரியகுளம் பகுதி மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வந்துள்ளனர். இதனை அடுத்து தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்வதாகக் கூறி, அதனை வேறு பகுதிக்குக் கொண்டு செல்ல நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து, பெரியகுளம் நகர் பகுதியில் சுற்றி திரிந்த நாய்களை பிடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பெரியகுளம் நகர்மன்ற தலைவரான சுமிதாவின் 4வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் பிரேம் சுதாகர். இவர் செல்லமாக நாய் ஒன்றை தனது வீட்டில் வளர்த்து வந்துள்ளார். அப்போது பிரேம் சுதாகரின் நாய், அவரது வீட்டின் அருகில் இருந்துள்ளது. தெருவோரம் அந்த நாயைக் கண்ட நகராட்சி ஊழியர்கள், அந்த நாயினை தெருநாய் என எண்ணி பிடித்துச் சென்றுள்ளனர்.
இதனை அறிந்த பிரேம் சுதாகர், இது குறித்து பெரியகுளம் நகர்மன்ற தலைவரின் கணவரான சிவக்குமாருக்கு தகவல் கூறவே, அதற்கு சிவக்குமார் நாய் பிடிக்கும் வாகனம் உசிலம்பட்டி பகுதிக்கு சென்று விட்டது என்றும் நாயை அப்பகுதியில் இறக்கி விட்டு விடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நாயை மீண்டும் பெரியகுளம் பகுதிக்கு கொண்டு வர 2 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனக் கூற, அதற்கு ஒரு வழியாக பிரேம் சுதாகர் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உசிலம்பட்டிக்கு கொண்டு செல்லபட்டதாகக் கூறப்பட்ட நாய் பிடிக்கும் வாகனம் பெரியகுளம் மயானம் அருகில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்தில் இருப்பதை கண்ட பிரேம் சுதாகர், நாய் பிடிக்கும் வாகனத்தில் இருந்த ஊழியர்களிடம் சென்று தனது நாயை கேட்டுள்ளார்.
அதற்கு ஊழியர்கள் 2 ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு நாயினை கொடுக்குமாறு நகர்மன்ற தலைவரின் கணவர் கூறியுள்ளதாகவும், 2 ஆயிரம் ரூபாய் தந்தால் மட்டுமே நாய் திரும்ப ஒப்படைக்கபடும் எனவும் கூறியுள்ளனர். இதையடுத்து, வேறு வழியின்றி காசை கொடுத்து நாயினை மீட்டுள்ளார் பிரேம் சுதாகர்.
இந்த நிலையில், நாயினை மீண்டும் தனது வீட்டிற்கு கொண்டு வந்த போதிலும், அந்த நாயை பிடிக்கும் பொழுது நகராட்சி ஊழியர்கள் சுருக்கு கம்பி போட்டு பிடித்ததால் கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் உணவு அருந்தாமல் 2 நாளில் நாய் உடல் நல கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தது உள்ளது. இதனை அடுத்து நாயினை குழந்தை போல வளர்த்து வந்த பிரேம் சுதாகர், அதை குழந்தையை அடக்கம் செய்வது போல மாலை, மரியாதை செய்து அடக்கம் செய்தார்.
இந்த நிலையில், வளர்ப்பு நாயை பிடித்து சென்ற நகராட்சி ஊழியர்கள் நாயை மீட்க ரூ. 2 ஆயிரம் கேட்டு பேரம் பேசியதைத் தொடர்ந்து, நாயின் உரிமையாளர் மற்றும் நகர்மன்ற தலைவரின் கணவர் சிவக்குமாரின் தொலைபேசி ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் நகர் மன்ற தலைவர் சுமிதாவின் கணவர் சிவகுமார், பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணி புரிந்து வந்தாலும் தற்போது பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா அலுவலகத்தில் மட்டுமே நகர் மன்ற தலைவராக செயல்பட்டு வருவதாகவும், மேலும் அவர் தேர்தலில் நின்று ஜெயிக்காமல் நிழல் நகர்மன்ற தலைவராக செயல்பட்டு வரும் நிலையில், வீட்டில் வளர்த்த நாயை விடுவிப்பதற்கு 2 ஆயிரம் ரூபாய் பெற்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சீமானுக்கு எதிரான புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம் துணை ஆணையர் விசாரணை!