தேனி: நகராட்சி அலுவலகத்தில் இன்று மாதந்திர நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. தேனி நகர்மன்ற தலைவர் ரேணுகா பிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 33 வார்டுகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிமுக, பாஜக கட்சியை சேர்ந்த 6 கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் எந்த திட்டமும் செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் நகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு அதிமுக, பாஜக கட்சியை சேர்ந்த ஆறு கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நலத் திட்டங்களை செயல்படுத்த நகராட்சியில் நிதி இல்லை என்று கூறியதால் பொதுமக்களுக்கு எந்தத் திட்டங்களும் செயல்படுத்த முடியவில்லை எனக்கூறி, பொதுமக்களே பிச்சை போடுங்கள் என கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடம் வார்டு உறுப்பினர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், நகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் நமக்கு நாமே திட்டத்தில் செயல்படுத்த கூறுவதாக வார்டு உறுப்பினர்கள் குற்றச்சாட்டாக கூறினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நகர்மன்ற உறுப்பினர்களிடம் நகர்மன்ற தலைவர் ரேணுகா பிரியா பாலமுருகன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, எதுவாக இருந்தாலும் கூட்ட அரங்கில் பேசி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என கூறி சென்றார்.
நகர்மன்ற கூட்டம் நடைபெற்ற போது தேனி நகராட்சி வாயிலில் அமர்ந்து வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்களிடம் பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.