இந்திய நறுமணப் பொருள்கள் வாரியம் சார்பில் ஏலக்காய் வர்த்தகத்திற்கான ஏல மையம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே உள்ள புத்தடி, தமிழ்நாடு தேனி மாவட்டம் போடி ஆகிய இரு இடங்களில் செயல்படுகிறது. மின்னணு ஏல முறையில் வர்த்தகம் நடைபெறும் ஏலத்தில் தமிழ்நாட்டின் விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் அதிகளவில் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில், புத்தடியில் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. புத்தடி மற்றும் போடி ஏலக்காய் ஏல மையத்தில் 100-க்கும் மேற்பட்ட கேரள, தமிழக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்வதால், கரோனா தடுப்பு நடவடிக்கையாக வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்று நறுமணப் பொருள் வாரிய அலுவலர்கள் கூறுகின்றனர்.
இதேபோல தமிழகத்தில் தேனி மாவட்டம் போடியிலும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏலக்காய் ஏல வர்த்தகத்தை நிறுத்தவேண்டும் என்று தமிழ்நாடு ஏலக்காய் வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து போடி ஏலக்காய் மின்னனு வர்த்தக மையமும் தற்காலிகமாக மூடப்பட்டது.
கடந்த மாதம் ஏலக்காய், ரூ. 4 ஆயிரத்துக்கு மேல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்ட நிலையில், தற்போது 1800 ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்கப்பட்டாலும் உற்பத்தி செய்த ஏலக்காயை வாங்க ஆளில்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் ஏலக்காய் வர்த்தகம் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.