தேனி: பெரியகுளம் தென்கரை வராக நதிக்கரையில் அமைந்துள்ள கௌமாரியம்மன் கோயில் அப்பகுதியில் புகழ்பெற்ற கோயில் ஆகும். கௌமாரியம்மன் கோயிலின் ஆனித் திருவிழாவை பெரியகுளத்தைச் சுற்றியுள்ள அனைத்துக் கிராம மக்களும் ஒன்றாக இணைந்து ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கௌமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா நேற்று (ஜூலை 4) துவங்கியது. திருவிழாவின் முதல் கட்டமான கம்பம் நடும் நிகழ்விற்காக தயார் செய்யப்பட்ட கம்பத்திற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பெரியகுளம் வடகரை பகுதியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பக்தர்கள் கம்பத்தை எடுத்து வந்தனர். அதன்பின், கௌமாரியம்மன் கோயில் முன்பாக உள்ள திடலில் சிறப்புப் பூஜைகள் செய்து கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயிலில் நடப்பட்ட கம்பத்தை ஊர்வலமாக எடுத்து வந்த பொழுது, 500க்கும் மேற்பட்ட பெண்கள் தாங்கள் விரதம் இருந்து போட்டு வைத்திருந்த முளைப்பாரிகளை தலையில் சுமந்தவாறு, பக்தி பரவசத்துடன் பெண்கள் சாமி ஆடியவாறு ஊர்வலமாக வந்து கௌமாரியம்மன் கோயிலில் வைத்து வணங்கி வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க: இந்து கோயில் திருவிழாவிற்கு வரவேற்று இஸ்லாமியர்கள் வைத்துள்ள விளம்பர பேனர்!
மேலும் நேற்று கம்பம் நடும் நிகழ்ச்சியின் மூலம் துவங்கிய இத்திருவிழாவில், பத்தாம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து நாள்தோறும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து வரும் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களும் திருவிழா நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற திருவிழாவின் முதல் நாளான கம்பம் நடும் நிகழ்ச்சியில் பெரியகுளம் நகரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
ஓ.பன்னீர் செல்வம் 25 ஆண்டுகளுக்கு முன்பு, பெரியகுளம் நகர் மன்றத் தலைவராக இருந்த பொழுது பெரியகுளம் நகரின் முக்கியத் திருவிழாவான கௌமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவின் துவக்க நாளில் கலந்து கொண்டு சாமி தரினசம் செய்து இருந்தார். அதனை அடுத்து நேற்று தான் திருவிழாவின் முதல் நாளில் 25 ஆண்டுகள் கழித்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.