தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் லட்சுமணன் (42). இவருக்கும் கம்பம் அருகேயுள்ள அணைப்பட்டியைச் சேர்ந்த அனுஷ்யா தேவி(33 ) என்பவருக்கும் திருமணமாகி சாரு தர்ஷணா (14) என்ற பெண்ணும், நிகிலன் என்ற மகனும் உள்ளனர்.
லட்சுமணன் கூடலூர் பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். லட்சுமணனுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து சென்றனர்.
லட்சுமணனை விட்டுப் பிரிந்து சென்ற அனுஷ்யாதேவி, ராயப்பன்பட்டியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே, நேற்று அனுஷ்யாதேவி தனது மகள் சாரு தர்ஷணாவின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது மகளை காண வந்த லட்சுமணனுக்கும், அனுஷ்யா தேவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சாரு தர்ஷணாவின் பிறந்த நாள் என்பதால், ஆசையுடன் மகளைக் காண வந்த தந்தை லட்சுமணன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
தொடர்ந்து குடும்பப் பிரச்னையால் சிக்கித் தவித்து வரும் அனுஷ்யாதேவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிகிறது. இந்நிலையில், வழக்கம்போல் இன்று காலை அனுஷ்யா தேவியின் வீடு திறக்காமல் இருப்பதைக் கண்டு, சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டைத் தட்டிப் பார்த்தனர். அப்போது, வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அனுஷ்யா தேவி தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயப்பன்பட்டி காவல் துறையினர், வீட்டை உடைத்து பார்க்கையில், அனுஷ்யா தேவி, அவரது மகள் சாருதர்ஷணா ஆகிய இருவரும் வீட்டின் வெவ்வேறு அறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர். பின்னர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ராயப்பன்பட்டி காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கோயில்களைத் தொல்லியல் துறை கையகப்படுத்துவதைத் தடுக்க வேண்டும்'