கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் அறிகுறியுடன் 41 பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தனர். இதையடுத்து, அவர்கள் வசித்த பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், அவர்களில் 18 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கரோனா பாதுகாப்புக் காரணங்களுக்காக, மேலும் 14 நாள்கள் வீட்டுக் கண்காணிப்பிலிருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
அவர்கள் வசிக்கும் பகுதிகளில் பொது மருத்துவ சுகாதாரத் துறை சார்பிலும், நகராட்சி, பேரூராட்சி சார்பிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அப்பகுதியில் வசிக்கும் நபர்கள் வெளியே சென்றுவர தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் வீடுகளுக்கே சென்று காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை தகுந்த பாதுகாப்புடன் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, குணமடைந்து வீடு திரும்பிய தேனி மாவட்டம் உத்தமபாளையம் கோட்டைமேடு தெருவில் வசிக்கும் நபர் இருக்கும் வீட்டைச் சுற்றியும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் முழுவதும் உத்தமபாளையம் பேரூராட்சிப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கரோனா பாதுகாப்பு உடையணிந்த சுகாதாரப் பணியாளர்கள் அந்தத் தெருக்களில் வசிப்பவர்களின் வீடு முகப்புகள், சாலையோரங்கள், மரம், செடி போன்ற பகுதிகள் முழுவதுமாக கிருமி நாசினி தெளித்தனர்.
அந்தப் பகுதியிலுள்ள வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், மக்கள் நடமாட்டமில்லாத பகுதியில் குழியிலிட்டு, முற்றிலுமாகத் தீ வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள வங்கிகளை மூட உத்தரவு