தேனி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடந்தது. இதில் பொதுமக்கள் பல இடங்களில் வாக்களித்தனர். இதனால் காவல் துறையினரின் கவனம் முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவு, பாதுகாப்பில் இருந்தனர்.
இதனைப் பயன்படுத்தி இரண்டு பேர் தலைக்கவசம் அணிந்து தேனி பழனிசெட்டிப்பட்டி, உத்தமபாளையம், கம்பம், ராயப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியாக பைக்கில் சென்ற தம்பதிகளை கவனத்தில்கொண்டு நகைப்பறிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் உத்தமபாளையம் பகுதியில் இரண்டு வீடுகளை உடைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட முயன்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தக் கும்பலைப் பிடிக்க தேனி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தனிப்படை அமைத்தார். நகைப்பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சார்ந்த மாணிக்கம், அதே ஊரைச் சேர்ந்த காமராஜர் நகர் செல்வராஜ் ஆகியோரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் இந்த இருவர் எனத் தெரியவந்தது.
இதனையடுத்து இவர்களிடமிருந்து 17 பவுன் தங்க நகை மீட்கப்பட்டது. மேலும் கொள்ளைச் சம்பவத்திற்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து உத்தமபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
இதையும் படிக்க: தூத்துக்குடியில் தொழிலதிபர் வீட்டில் கார், டி.வி. திருட்டு!