தேனி மாவட்டம் போடி நந்தவனத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா. நிறைமாத கர்ப்பிணியான இவர் பரிசோதனைக்காக நேற்று வெள்ளிக்கிழமை போடி அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். பரிசோதனைக்கு தாமதம் ஆகும் என்பதால் மருத்துவமனையில் கார்த்திகாவை இறக்கி விட்டு ஆட்டோ ஓட்டுநர் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது போடி நகர் காவல் நிலையம் முன்பாகப் பணியில் இருந்த காவல் துறையினர், ஊரடங்கு உத்தரவை மீறி ஆட்டோ ஓட்டியதற்காக வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். பரிசோதனை முடிந்து வீடு திரும்புவதற்காக ஆட்டோ ஓட்டுநரை தொலைபேசியில் கார்த்திகா அழைத்தபோது, நடந்தவற்றை ஆட்டோ ஓட்டுநர் விளக்கியுள்ளார்.
பின்னர் சுமார் இரண்டு கி.மீ தூரம் அரசு மருத்துவமனையில் இருந்து நடந்தே காவல் நிலையம் வந்த கார்த்திகா, ஆட்டோவை விடுவிக்குமாறு காவல் துறையினரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் வாகனத்தை விடுவிக்க மறுத்த காவல் துறையினர், ஆட்டோ ஓட்டுநர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்த அப்பெண்மணி, அங்கிருந்து சென்றுள்ளார்.
இதேபோல் போடி சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அபர்ணா என்ற கர்ப்பிணி, மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றபோது மார்க்கெட் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போடி நகர் காவல் ஆய்வாளர் ஷாஜகான் தலைமையிலான காவல் துறையினர், அபர்ணாவை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி ஆட்டோவில் இருந்து இறக்கி விட்டுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் அபர்ணா அங்கிருந்து மருத்துவமனைக்கு நடந்தே சென்றுள்ளார். மேலும், அவர் சென்ற ஆட்டோவையும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இ்ருவேறு இடங்களில் நடைபெற்ற இச்சம்பவம் பொதுமக்களிடையே காவல் துறையினர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கினால் பாதிக்கப்படும் மக்களுக்கு காவல் துறையினர் ஓடி ஓடி உதவிவரும் இச்சூழலில், இது போன்ற சிலரின் செயல்பாடுகளால் அத்துறைக்கு களங்கம் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: தென்காசியில் நாளை முழு ஊரடங்கு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு