தேனி: பெரியகுளம் கைலாசபட்டி பகுதியில் தேனி நடாளுமன்ற உறுப்பினர் ஒ.பி.ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில், அப்பகுதியில் ஆடு மேய்த்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
65 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்ததை அடுத்து அலெக்ஸ் பாண்டியன் விடுதலை செய்யப்பட்டார்.
ஜாமினில் வெளிவந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்கத்தினர் வெடி வெடித்து மாலை அணிவித்து வரவேற்றனர்.
இந்நிலையில் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் கால்நடை வளர்ப்பு சங்கத்தினர் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில், சிறுத்தை உயிர் இழந்த விவகாரத்தில் தன்னை வனத்துறை அதிகாரிகள் அடித்து தாக்கி துன்புறுத்தியதாகவும், தன்னை சுட்டு கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் அலெக்ஸ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்யாத தவறை கையெழுத்து போட்டு ஒத்துக் கொள்ள வேண்டும் என கடுமையாக தாக்கியதாகவும், தேனி மாவட்ட உதவி வனக்காவலர் மகேந்திரன் மற்றும் தேனி வனச்சரக அதிகாரி செந்தில்குமார் மற்றும் ஆனந்த பிரபு உள்ளிட்ட
மூன்று வனத்துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கால்நடை வளர்ப்பு நலச் சங்கத்தின் வழக்கறிஞர் கூறுகையில், மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்க உள்ளதாகவும், தமிழக முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்தி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: சி.விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கம்: உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம்!