நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆண்டுதோறும் பருவ மழைக்கு முன், பின் என இரண்டு முறை வன உயிரின கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு தென்மேற்கு பருவ மழைக்கு பிந்தைய வன உயிரின கணக்கெடுப்பு பணி கடந்த நவம்பர் 5ஆம் தேதி உள்மண்டல வனப்பகுதியில் தொடங்கியது.
முதுமலை வெளிமண்டல வனப்பகுதியில் 367 சதுர கிலோமீட்டர் பரப்பிலான வனப்பகுதியில் கணக்கெடுக்கும் பணி இன்று (நவ.17) தொடங்கியது. இந்த பணியானது வரும் 22ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதில் 150க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வனவிலங்குகளின் கால் தடம், எச்சம், நேரடி பார்வை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. கணக்கெடுக்கும் பணி துல்லியமாக நடைபெற ஜிபிஎஸ் போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
வனப்பகுதியில் உள்ள மரங்கள், தாவரங்களை கணக்கெடுக்கும் பணியும் நடக்கிறது. இந்த முறை கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கரோனா தொற்று காரணமாக இந்த பணியில் ஈடுபடுத்தப்படவில்லை.
இதையும் படிங்க:உதகையில் வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்