நீலகிரி மாவட்டம் குன்னூரில் வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தும் நிலை இருந்தது. குறிப்பாக மவுண்ட் ரோட்டில் வாகன நெரிசல் அதிகளவில் ஏற்பட்டது. இதனால் மவுண்ட் ரோடு வழியாக அரசு மருத்துவமனைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனால் வி.பி. தெரு ஓடையின் மேல் கான்கிரீட் தளம் அமைத்து வாகன நிறுத்துமிடம் 2006-2007ஆம் ஆண்டு 42 லட்சம் ரூபாயில் திறக்கப்பட்டது. பின்னர் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு கட்டணம் வசூலிக்க நகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டது. 2017ஆம் ஆண்டு நகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டதில் சிவஞானம் என்பவர் ஒப்பந்தம் எடுத்தார். அதன்படி 2017ஆம் ஆண்டிற்கு 10 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும், 2018ஆம் ஆண்டிற்கு 10 லட்சத்து 60 ஆயிரத்து 500 ரூபாயும் 2019ஆம் ஆண்டிற்கு 11 லட்சத்து 13 ஆயிரத்து 525 ரூபாயும் நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
மேலும், மூன்று ஆண்டுகளுக்கு தொழில் வரியாக ஏழாயிரத்து 350 ரூபாய், சேவை வரியாக ஐந்து லட்சத்து 27 ஆயிரத்து 675 ரூபாய் என மொத்தம் 37 லட்சத்து 19 ஆயிரத்து 50 ரூபாய் செலுத்த வேண்டியது இருந்தது. இதில் 19 லட்ச ரூபாய் பாக்கி தொகை இருந்தது. இந்த சூழலில், நிலுவை தொகை கட்டும் காலக்கெடு நேற்று முடிவுற்றதால் நகராட்சி அலுவலர்கள் வாகன நிறுத்துமிடத்தை பூட்டி சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: ஏலத்துக்கு வரும் நீரவ் மோடியின் சொத்துகள் !