நீலகிரி மாவட்ட வணிகர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் உதகையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா கலந்து கொண்டார். அதில் நீலகிரி மாவட்ட வணிகர்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமராஜா, ‘தமிழ்நாட்டில் வணிகர்களின் பிரச்னையை தீர்க்க அரசு தனி குழு அமைக்க வேண்டும். மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் உதகையில் உள்ள நகராட்சி கடைகளுக்கு மட்டும் பல மடங்கு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை உடனடியாக திரும்பப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.
தமிழ்நாடு பாலில் தான் நச்சுத்தன்மை அதிகம்- மத்திய அரசு தகவல்...!
மேலும் இணையச் சந்தையில் விற்பனை செய்யப்படும் மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள், மருந்துகள் தரமற்றவையாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், வணிகர்களைப் பாதிப்படையச் செய்துள்ள இணைய வர்த்தகத்தை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையென்றால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.