உதகை நகரில் சாலை விதியை மீறி காரை ஓட்டி சென்ற முன்னாள் உதகை நகர்மன்ற துணை தலைவரும் அதிமுக பிரமுகருமான கோபாலகிருஷ்ணன் என்பவரது மகனை தட்டி கேட்ட காவலர்களை, நடுவிரலை காட்டி மிரட்டி சென்ற வாட்ஸ்அப் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் மீது உதகை பி1 காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உதகை நகர்மன்ற முன்னாள் துணை தலைவரும், நீலகிரி அதிமுக பிரமுகருமான கோபாலகிருஷ்ணனுக்கு சுர்ஜித் கிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். கல்லூரியில் படித்து வரும் இவர், கரோனா ஊரடங்கால் தற்போது உதகையில் உள்ள நிலையில், நேற்று (செப்டம்பர் 5) காலை தந்தை கோபாலகிருஷ்ணணுடன் உதகை ஏடிசி சாலையில் காரில் சென்றார். அப்போது சுர்ஜித் கிருஷ்ணன், சாலை விதியை மீறி ஒரு வழி பாதையில் காரை ஓட்டி சென்றார். மேலும் இருவரும் சீட் பெலட் அணியாமலும், முகக் கவசம் இன்றியும் பயணித்தனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் காரை நிறுத்தி தட்டி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுர்ஜித் கிருஷ்ணன் காவலர்களை தகாத வார்த்தையால் திட்டியதுடன் தனது நடுவிரலை காட்டி ஆபாசமாகவும் ஒருமையிலும் மிரட்டியவாறு காரில் அங்கிருந்து புறபட்டு சென்றார்.
இதனை காவலர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிட்டதையடுத்து, வைரலாகியது. இதனிடையே சாலை விதியை மீறியது மட்டுமின்றி, தகாத செயலில் ஈடுபட்டது, காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது என கூறி சுர்ஜித் கிருஷ்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் உதகை பி1 காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தவளைகளை வேட்டையாடி சமைத்த வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றிய இருவர் கைது!