கூடலூர் - பந்தலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த வாரமாக வரலாறு காணாத கனமழை பெய்துவருகிறது. இடைவிடாது பெய்த இந்த மழையின் காரணமாக 100-க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. மேலும், ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்துள்ளன.
கூடலூரிலிருந்து மலப்புரம், வயநாடு செல்லும் மலைப் பாதையில் தமிழ்நாடு, கேரள அரசுப் பேருந்துகள் உட்பட 50 வாகனங்கள் இங்கு சிக்கிக்கொண்டன. இச்சாலையில் சுமார் எட்டு இடங்களில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதில் சிக்கிக் கொண்ட வாகனங்கள் கடந்த ஆறு நாட்களாக வெளியேற முடியாமல் தவித்துவருகின்றன.
பின்னர், இந்த வாகனங்களை மீட்க வயநாடு ஆட்சியர் நீலகிரி ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து, சுமார் 25 பாதுகாப்புப் படையினர் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் கேரளா சாலையில் உள்ள வாகனங்கள் மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.