நீலகிரி மாவட்டம், குன்னூரில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான 'காட்டேரி பூங்கா' செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவிற்கு ஆண்டுதோறும் இரண்டு கட்டமாக சீசன்களில் மக்கள் கூட்டம் வருகிறது. முதல்கட்ட சீசன் ஏப்ரல், மே மாதங்களிலும்; இரண்டாவது கட்ட சீசன் செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலும் நடைபெறுகிறது.
இந்த சீசனில் தோட்டக்கலைத்துறை நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு வண்ண மலர்களைக் கொண்ட புதிய நாற்றுகள் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சீசன் காலங்களில் மலர்ச் செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கும் அழகை ரசிக்கவும், இயற்கை எழில் சூழ்ந்த பசுமையான இந்தப் பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வரக்கூடும். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக இரண்டாம் கட்ட சீசனுக்கு சுமார் ஒன்றரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.
தற்போது இந்தப் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசன் தொடங்கியுள்ளதால் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இருந்தபோதிலும் தற்போது கரோனா பாதிப்பு காரணமாக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் முறையாக கிடைக்காததால் பர்லியார் சோதனைச் சாவடியிலேயே சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். தற்போது இரண்டாம் கட்ட சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல், இந்தப் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. எனவே, எளிதான முறையில் இ-பாஸ் வழங்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:
'சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட கரூர் விவசாயிகளுக்கு மூன்று மடங்கு நிவாரணம்' - எம்.ஆர். விஜயபாஸ்கர்