நீலகிாி மாவட்டத்தில் சில நாள்களாக பெய்துவந்த கனமழையால் சாலைகளில் மண்சரிவும் நிலச்சரிவும் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல், மலை ரயில் பாதையில் ஆங்காங்கே பாறைகள், மரங்கள் விழுவதால் தண்டவாளங்கள் சேதமடைந்து மலை ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மலை ரயிலும் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இயக்கப்படும் மலை ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்தது.
இதனால் கடந்த இரண்டு நாள்களாக மலை ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மழையின் அளவு குறைந்ததைத் தொடர்ந்து மீண்டும் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான மலை ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதன் காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் தொடங்கிய குன்னூர்-உதகை மலை ரயில் சேவை!