நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் புலிகள், சிறுத்தைகள், யானைகள், கரடிகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
இந்நிலையில், நீலகிரி – ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள சீகூர், தெங்குமரஹாடா வனப் பகுதியில் மட்டும் வாழ்ந்து வரும் ஐனா (Striped hyena) எனப்படும் அரிய வகை கழுதைப் புலி, கடந்த மாதம் முதன்முறையாக மசினகுடி வனப்பகுதியில் தென்பட்டது.
பொதுவாக அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே வாழும் இந்த கழுதைப்புலி, பொதுமக்கள் அதிகமுள்ள மசினகுடி பகுதியில் தென்பட்டது வனத்துறையினரிடையே வியப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், மசினகுடி அருகேயுள்ள ஆச்சக்கரை சாலை ஓரத்தில் நேற்று (ஜுன் 13) ஆண் கழுதைப் புலி இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்று அதனை மீட்ட வனத்துறையினர், முதுமலை புலிகள் காப்பக கால் நடை மருத்துவரைக் கொண்டு உடல் கூராய்வு பரிசோதனை மேற்கொண்டர்.
அதில், உயிரிழந்த கழுதைப் புலிக்கு சுமார் 8 வயது இருக்கும் என்பது தெரியவந்தது. மேலும் அது வாகனம் மோதி உயிரிழந்திருக்கும் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, கழுதைப் புலியின் உடலைத் தகனம் செய்த வனத்துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தப்ப முயன்ற பிரபல ரவுடி... தடுக்கி விழுந்து கை, கால் முறிவு