நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதியில் தெங்குமரஹாடா, அல்லி மாயாறு, கல்லாம்பாளையம் ஆகிய மூன்று கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தெங்குமரஹாடா செல்வதற்கு பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள கரடுமுரடான மண் சாலையில் 20 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.
இந்த சாலையின் குறுக்கே ஆங்காங்கே பள்ளங்கள், ஓடைகள், காட்டாறுகளும் உள்ளன. தெங்குமரஹாடா வனக்கிராமத்திற்கு தினமும் இரண்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் பவானிசாகர் அணையில் தற்போது முழுக்கொள்ளளவான 105 அடி வரை நீர் தேங்கியுள்ளதால், தெங்குமரஹாடா செல்லும் சாலையில் உள்ள இரண்டு பள்ளங்களிலும் சுமார் மூன்று அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியுள்ளது.
கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு தெங்குமரஹாடா சென்ற அரசுப் பேருந்து பள்ளத்தைக் கடக்கும்போது நீரில் சிக்கி, நகர முடியாமல் நின்றது. இதன்காரணமாக தெங்குமரஹாடா செல்லும் இரண்டு அரசுப் பேருந்துகளும் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டன. இதன்காரணமாக மூன்று வனக் கிராம மக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.
அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டது குறித்து தெங்குமரஹாடா கிராம மக்கள் மேட்டுப்பாளையம், கோத்தகிரி அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது சரி வர பதிலளிக்காததால், 300க்கும் மேற்பட்டோர் வனச்சாலையை சீரமைக்கக்கோரி கடந்த வெள்ளிக்கிழமை சத்தியமங்கலம் மாவட்ட வனஅலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வனத்துறை, பொதுமக்கள் இணைந்து இரண்டு பள்ளங்களில் நீர்தேங்கிய இடத்தில் மண்கொட்டி சாலை சீரமைப்புப் பணி மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று முதல் தெங்குமரஹாடா கிராமத்திற்கு வழக்கம் போல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதையும் படிங்க: