தஞ்சாவூர்: காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், கர்நாடக அரசை கண்டித்து வரும் 11ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 8 மாவட்டங்களில் முழு கடையடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக ஜுன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனையடுத்து இந்தாண்டு வழக்கத்தை விட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடியை விவசாயிகள் செய்தனர். இந்நிலையில் காவிரியில் கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல், நேரடி நெல் விதைப்பு மற்றும் இயந்திர நடவு பயிர்கள் என சுமார் 3 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகிவிட்டது.
இந்நிலையில், எஞ்சிய குறுவை பயிரை பாதுகாத்திடவும், வரும் சம்பா சாகுபடி பணிகளை துவக்கிடவும், தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய காவிரி தண்ணீரை கர்நாடகா அரசு வழங்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் இரண்டு முறை பந்த் போராட்டத்தை அங்குள்ள விவசாய அமைப்புகள் நடத்தியுள்ளன.