தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பிள்ளையார்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா. கூலித் தொழிலாளியான அவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டார். அவர் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில் தனது இடது காலை இழந்தார். விபத்தில் உரிய இழப்பீடு கிடைக்காமலிருந்து வந்த அவர், இழப்பீடு கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர முடிவெடுத்தார்.
அதனால் தனது நண்பர் மூலம் மதுரையிலுள்ள வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து பேசினார். வழக்கறிஞர் விபத்து தொடர்பான ஆவணங்களை எடுத்துக்கொண்டு நேரில் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஊரடங்கில் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அவர் சைக்கிளில் மதுரைச் செல்ல திட்டமிட்டார். ஏனென்றால் அவர் ஒரு காலில் சைக்கிள் ஓட்டுவதில் தேர்ந்தவர்.
அதன்படி, நேற்று (ஆகஸ்ட் 3) தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியிலிருந்து மதுரைக்கு சைக்கிளில் பயணத்தைத் தொடங்கி மதுரை சென்றார். இதற்கிடையில் அவர் கூறுகையில், "ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துவிட்டேன். இப்படிபட்ட சூழலில் எனக்கு இழப்பீடு தேவை.
அதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். அதில் இழப்பீடு கிடைத்தால், அதில் ஒரு பாதியை என்னைப் போல விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள கொடுப்பேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’என்னை மாற்றுத்திறனாளி என அடையாளப்படுத்திவிடுங்கள்’ - இருத்தலுக்காகப் போராடும் பெண்!