தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மதுக்கூர் பிரிவு சாலையில் துணை ஆய்வாளர் முத்து குமார் தலைமையிலான காவல்துறையினர் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைக் காவல் துறையினர் மடக்கி விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததில் சந்தேகமடைந்த முத்து குமார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றார்.
அங்கு அவர்களிடம் காவல் துறைக்கே உரிய பாணியில் விசாரித்ததில், ஒருவர் நம்பிவாயல் உதயநிதி (27), மற்றொருவர் அவரது மைத்துனரும் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவருமான வீரபெருமாள் (35) என்பது தெரியவந்தது, இவர்கள் இருவரும் கூட்டாகச் சேர்ந்து பாப்பாநாடு பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடி வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து, இவர்கள் அளித்த தகவலின் பேரில் பாப்பாநாடு பகுதியில் திருடு போன இரண்டு புல்லட் இருசக்கர வாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கைதானவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கைதான உதயநிதி மீது சென்னை, ஊட்டி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 150 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகப் பாப்பாநாடு காவல் நிலைய சிறப்புப் பிரிவு காவல்துறை அலுவலர் அருள் தெரிவித்தார்.
இதையும் படிங்க : லேசான கரோனா அறிகுறியா? - வீட்டிலேயே தனிமைப்படுத்த அரசு உத்தரவு!