தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (54). கடந்த 30 வருடமாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்த இவர் காஷ்மீரில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ராமச்சந்திரன் காஷ்மீரில் நேற்று முன்தினம் (மார்ச் 29) மாரடைப்பால் இறந்துவிட்டதாக அவரது மனைவி சீதா குமாரிக்கு திருச்சியில் உள்ள துணை ராணுவ படை அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவித்தனர்.
தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனையடுத்து, அவரது முகத்தை கடைசியாக ஒரு தடவை நாங்கள் பார்க்க வேண்டும். அவரது உடலை கொண்டுவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க அவரது குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா தொற்று பரவுதலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருவதால் இறந்தவரின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. ராமச்சந்திரன் ஓய்வு பெற இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் அவர் திடீரென இறந்தது அவரது குடும்பத்தார்கள் மட்டுமல்லாமல் அவரது உறவினர்களையும் வேதனையடைய செய்துள்ளது.
தற்போது ராமச்சந்திரனின் உடல் ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ராமச்சந்திரனுக்கு ரம்யா என்ற மகளும் ராகுல் என்ற மகனும் உள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா நிவாரண டோக்கன் பெற முண்டியடித்து வந்த மக்கள்!