தஞ்சாவூர்: 108 வைணவ திவ்ய தேசங்களில் 21ஆவது திவ்ய தேசமாக போற்றப்படும் கும்பகோணம் அருகே உள்ள நாதன்கோயில் செண்பகவள்ளி தாயார் சமேத ஜெகந்நாதபெருமாள் திருக்கோயிலில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு உதயகருட சேவை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து உற்சவர் பெருமாள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
நான்குனேரி ஸ்ரீ வானமாமலை ஜீயர் சுவாமிகள் திருமட நிர்வாகத்திற்குட்பட்ட இச்சிறப்பு பெற்ற நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந்நாதப் பெருமாள் திருக்கோயிலில் மூலவர் சீனிவாசன் மேற்கு நோக்கி வைகுண்டத்தில் உள்ளது போன்று ஸ்ரீ தேவி, பூமிதேவி தாயாருடன் ஒரே ஆசனத்தில் அமர்ந்த திருக்கோலத்திலும், செண்பகவல்லி தாயார் கிழக்கு முகம் நோக்கி தனி சன்னதி கொண்டும் அருள்பாலிக்கின்றனர்.
ஜயவிஜயர்களால் அதிகார நந்திக்கு பாகவதாப சாரத்தினால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் வழிபாடு செய்து தை அமாவாசை தினத்தில் சாபநிவர்த்தி கிடைத்த புண்ணிய சேஷத்திரம், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம், 108 திவ்ய தேசங்களில் 21வது தலமும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் நடுநாயகமான தலமும் ஆகும்.
இது பிரம்மாவினால் பூஜிக்கப்பட்ட, மார்கண்டேயருக்கு காட்சியளித்த, நந்தியம்பெருமானுக்கு சாப விமோசனமும் அளித்த புண்ணிய தலமும் ஆகும். இத்தலத்தில் குழந்தைபேறு இல்லாத தம்பதியர்கள் ஐப்பசி மாத சுக்லபட்ச வெள்ளிக்கிழமையில் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து பாயசம் நிவதனம் செய்தால் குழந்தைபேறு கிட்டும் என்பதும் ஐதீகம்.
இத்தகைய சிறப்பு பெற்ற இத்தலத்தில் நந்தியம் பெருமானுக்கு சாபவிமோசனம் கிடைத்த தை அமாவாசையினையொட்டி இன்று கருட வாகனத்தில், அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பெருமாள் எழுந்தருள, வேத பண்டிதரகள் பாசுரங்கள் பாட, நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டு, சிதறு தேங்காய்கள் உடைக்க, உதயகருட சேவையும் தொடர்ந்து நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க திருவீதியுலாவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு கருடவாகனத்தில் எழுந்திருளிய பெருமாளை தரிசனம் செய்து மகிழ்ந்தனர் முன்னதாக மூலவர் ஜெகந்நாதபெருமாள் மற்றும் செண்பகவல்லி தாயார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடையநல்லூர் அருகே களைகட்டிய பூக்குழி திருவிழா!