தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் கரோனா தொற்று பரவலை பொறுத்தும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் ஊரடங்கு உத்தரவில் தமிழ்நாடு அரசு தளர்வுகளை அறிவித்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 8ஆவது கட்ட ஊரடங்கில், மாவட்டத்திற்குள் பொது, தனியார் போக்குவரத்திற்கும், மேலும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்க நேற்று (செப்டம்பர் 1) முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில, தென்காசி மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் நேற்று திறக்கப்பட்டதையடுத்து, சுவாமி தரிசனம் செய்ய காலை முதலே திரளான பக்தர்கள் கோயில் வாசலில் காத்திருந்தனர். காலை 7 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டது. முகக் கவசம் அணிந்து வந்த பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை சோதனைக்குப் பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் சானிடைசர் அளிக்கப்பட்டது. பின்பு பக்தர்கள் தங்கள் கை, கால்களை சுத்தம் செய்து கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 674 நபர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், அரசு அறிவுறுத்தலின்படி கோயில் நிர்வாகம் பக்தர்கள் கொண்டு வந்த பூஜை பொருள்களை அனுமதிக்கவில்லை. மேலும் பரிசோதனையின்போது உடல் வெப்பநிலை அதிகமாக இருந்த 10 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அதோடு குழந்தைகள், முதியோரை சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்காமல் கோயில் நிர்வாகம் திருப்பி அனுப்பியது.
