தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடியில் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் நடத்தும் தைப்பூச பிரமோற்சவ விழா பிரசித்தி பெற்றது. உள்ளுரிலும், சுற்று வட்டாரத்திலும் உள்ள ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சுவாமி மேற்கொள்வார்கள். பத்து நாள்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விழாவினை நடத்துவார்கள்.
இந்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி, கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 18ஆம் தேதி தைப்பூசம் அன்று தேரோட்டம், பின்னர் 20ஆம் தேதி தெப்ப திருவிழா நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. தற்போது, கரோனா தொற்று அதிகரிப்பதால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தளங்களும் அரசு வழிகாட்டுதல்படி மூடப்பட்டுள்ளன.
கோயிலுக்குள் திருவிழா
இக்கோயில்களில் பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த வருடம் தைப்பூச பிரமோற்சவ விழாவில் இரண்டு சமுதாயத்தை சேர்ந்தவர்களின் திருவிழாக்கள் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.
ஆகவே விழாக்களை நடத்துவது பற்றிய அனைத்து சமுதாய தலைவர்களுடான ஆலோசனை கூட்டம் புளியங்குடி காவல் நிலையத்தில் நேற்று (ஜன. 8) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காவல் துணை ஆய்வாளர் பரத்லிங்கம், கோயில் நிர்வாக அதிகாரி கணேஷ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தென்காசி ஆர்டிஒ ராமச்சந்திரன், உதவி ஆணையர் கோமதி ஆகியோருடன் கலந்தாலோசித்தபின் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கரோனா பரவல் காரணமாக இந்த வருடம் தைப்பூச பிரமோற்சவ விழாவை கோயிலுக்குள்ளேயே நடத்துவது என்றும் தேரோட்டம், தெப்ப திருவிழாக்களை ரத்து செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
நோய் தொற்று பரவாமல் இருப்பதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து சமுதாய தலைவர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: Sunday Lockdown: நெல்லையில் ஏழு சோதனைச் சாவடிகள்; காவலர்கள் குவிப்பு