தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி தேனருவி, செண்பகாதேவி அருவி, மெயின் அருவி சிற்றருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகள் உள்ளன.
இதில் வனத் துறை கட்டுப்பாட்டிலுள்ள செண்பகாதேவி அருவியின் அருகில் மிகவும் பழமைவாய்ந்த செண்பக தேவியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும், உள் மாவட்டங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
பௌர்ணமி காலங்களில் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள், ஒருநாள் இரவு தங்கி, பொங்கல் பொங்கி, அம்மனுக்குப் படையலிட்டு வழிபட்டுச் செல்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடைபோடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வில் தமிழ்நாடு அரசு கோயில்களைத் திறக்க அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில் நாளை பௌர்ணமி என்பதால் செண்பக தேவி கோயிலுக்குச் சென்று வழிபடலாம் என்று பக்தர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் பக்தர்கள் வருகைக்கு வனத் துறையினர் தடைவிதித்துள்ளனர். இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், "கடந்த சில தினங்களுக்கு முன்பு மெயின் அருவி பகுதியிலிருந்து செண்பகாதேவி அருவி பகுதிக்குச் செல்லும் வழியில் வனத் துறையில் பணியாற்றிவந்த வேட்டைத் தடுப்புக் காவலர் பணியிலிருந்தபோது ஒற்றை காட்டு யானை அவரைத் தாக்கி மிதித்துக் கொன்றது.
மேலும், வனவிலங்கு நடமாட்டம் இருப்பதால் மக்களின் பாதுகாப்பைக் கருதி அங்கு செல்வதற்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.
மேலும் தினந்தோறும் கோயிலுக்குச் சென்று பூஜைகள் நடத்திவரும் அர்ச்சகருக்கும் கோயிலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.