தென்காசி மாவட்டத்தில், கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டி, சங்கரன்கோவில், உள்ளிட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் ஆட்சியர் சமீரன் தலைமையில், அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில்," முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி தென்காசியில் ஆய்வு மேற்கொண்டோம்.
இந்தக் கூட்டத்தில் கரோனா தொற்றிலிருந்து மாவட்ட மக்களை மீட்டு எடுப்பதற்கும், மாவட்டத்தில் கரோனா ஒழிப்பு நடவடிக்கைப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தோம். 18 - 44 வயது உள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியை ஆய்வு செய்தோம். மாவட்டத்தில் கள பணியாற்றிவரும் 1,656 பேருக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மூலம் உடல் இரத்த ஆக்சிஜன் அளவை அறியும் கருவி வழங்கப்பட்டது.
சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் முலம் கரோனா தடுப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் கர்ப்பிணிகளுக்கு இரண்டு இடங்களில் தனி சிகிச்சை மையம் உள்ளது. தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில், தற்போது 1 1/2 கிலோ லிட்டர் ஆக்சிஜன் கொள்ளவு கொண்ட கிடங்கு உள்ளது.
மருத்துவக் கல்லூரி வேண்டும் என்ற மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று விரைவில் அமைக்கப் பரிசீலனை செய்ய உள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு!