விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தென்காசி மாவட்டத்தில் அடவிநயினார் அணை, கருப்பாநதி, கடனாநதி, ராமாநதி, குண்டாறு ஆகிய அணைகள் உள்ளன. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் தென்மேற்கு பருவமழை காரணமாக மேக்கரை பகுதியில் உள்ள 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை இரண்டு முறை அதன் முழு கொள்ளளவை எட்டியது. அதனையடுத்து நீர் வெளியேற்றப்பட்டது காரணமாகவும், மழை இல்லாததன் காரணமாகவும் நீர் மட்டம் குறைந்தது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாள்களாக பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக அடவிநயினார் அணை இந்த ஆண்டு மூன்றாவது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இந்த அணையின் மூலம் வடகரை, அச்சன்புதூர், குதுக்கள்வலசை, ஆய்க்குடி, சாம்பார் வடகரை, சுரண்டை, பண்பொழி உள்ளிட்ட 18 கிராமங்களில் உள்ள 7500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.
தற்போது அணையின் நீர்மட்டம் நிரம்பியதன் காரணமாக விவசாயிகள் பாசன சாகுபடியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதேபோன்று தென்காசி மாவட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கேரளாவில் கனமழை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து அதிகரிப்பு