தென்காசியில் இருந்து டெல்டா மாவட்டங்களை இணைக்கும் வகையில் பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையின் படி தற்போது இந்த இணைப்பு மயிலாடுதுறை - திண்டுக்கல் இடையே இயங்கி வரும் 16847/16848 ரயிலையும், மதுரை - செங்கோட்டை 06665/06662 ரயிலையும் ஒன்றாக இணைத்து ஒரே ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் 16847 மயிலாடுதுறையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும். மறு மார்க்கத்தில் செங்கோட்டை மயிலாடுதுறை விரைவு ரயில் 16848 செங்கோட்டையிலிருந்து காலை 07.00 மணிக்குப்புறப்பட்டு மாலை 05.10 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும்.
இந்த ரயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்கள் தற்போது 14 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றது. செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் இணைப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 25 ஆண்டுகளுக்குப்பிறகு, இந்த ரயில் முதல்முறையாக செல்வதால் ரயில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் தென்காசி ரயில் நிலையத்தில் நகர்மன்றத் தலைவரும், நகர திமுக செயலாளருமான சாதிர், ரயில்வே பயணிகள் நலச் சங்க தலைவரும், மதிமுக நகர செயலாளருமான வெங்கடேஸ்வரன் தலைமையில் சிறப்பான ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் காற்றின் தரம் அபாயகரமான அளவில் உள்ளது - மாசு கட்டுப்பாட்டு வாரியம்