தமிழ்நாடு அரசு சில தினங்களுக்கு முன்பு ஐஏஎஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. அதனடிப்படையில் தென்காசி மாவட்டத்திற்கு நான்காவது மாவட்ட ஆட்சியராக சென்னை குடிநீர் வழங்கல் பிரிவில் இயக்குநராக பணியாற்றிய ஆகாஷ் நேற்று (ஜூன் 16) பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அலுவலர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வந்த நிலையில், சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அலுவலர் சுப்பிரமணியனும் ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரை தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்திக்க வந்த கல்வித்துறை அலுவலர் திடீர் மயங்கி விழுந்து, மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பையும், கல்வித் துறை அலுவலர்களிடம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விசாரணைக் கைதி ராஜசேகர் உடற்கூறாய்வு வீடியோ- குடும்பத்தாரிடம் ஒப்படைத்த நீதிமன்றம்