தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனையை முன்னிட்டு கைத்தறி ரகங்களுக்கு 30 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டுவருகிறது.
இதன் தொடர்ச்சியாக, தென்காசி மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்புச் தள்ளுபடி விற்பனை தொடக்க விழா இன்று (அக்டோபர் 15) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், குத்துவிளக்கேற்றி சிறப்பு விற்பனையை தொடக்கிவைத்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெண்கள் விரும்பும் மென்பட்டு சேலைகள், சுப முகூர்த்தப்பட்டு சேலைகள், ஆர்கானிக் சேலைகள், பருத்தி சேலைகள், சுடிதார்கள், ரெடிமேட் சட்டைகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக புதிய வரவாக மதுரை காட்டன் சேலைகள், காதா சேலைகள், காதா பெட்சீட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும், வாடிக்கையாளர் பயன்பெறும் வகையில் கனவு நனவு சேமிப்புத் திட்டம் நடைமுறையில் உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த தீபாவளி பண்டிகை காலத்தில் 48 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு 55 லட்சம் ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி முதுநிலை மண்டல மேலாளர் இசக்கிமுத்து, தென்காசி கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் ராஜேஸ்வரி, ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.