சிவகங்கை: சிவகங்கையில் எஸ்.பி தலைமையில் இலங்கை பிரமுகர் ஒருவர் குழிக்குள் அமர்ந்து மேலே தீயிட்டு உயிரைப் பணயம் வைத்து தியானம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி காவல்துறையின் உரிய அனுமதி பெறாததால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையைச் சேர்ந்த சோழன் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனத்தின் சார்பில் சிவகங்கை காமராஜர் காலனி அருகே இலங்கையைச் சேர்ந்த மொஹமத் முசாதிக் என்கிற நபர் தரையில் குழி அமைத்து உள்ளே அமர்ந்து மேலே பலகையால் மூடி அதற்கு மேல் விறகுகளை அடுக்கி அதில் தீயிட்டு உள்ளேயே ஒன்றரை மணி நேரம் தியானம் செய்யும் நிலவறைக்குள் ஒன்றரை மணி நேரம் என்கிற உயிரைப் பணயம் வைத்துச் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி இன்று (ஏப்.3) நடைபெறவிருந்தது.
இதற்கு மாவட்ட எஸ்.பி செந்தில்குமார் தலைமை தாங்குவதாகவும் அழைப்பிதழ் அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, குழி தோண்டி உள்ளே சி.சி.டி.வி கேமரா பொருத்திச் சுற்றி விறகுகளும் குவிக்கப்பட்டிருந்தன. அவரும் தனது சாதனையை நிகழ்த்தத் தயாரானார். மேலும் அந்த உலக சாதனையைக் காண ஏராளமான பொது மக்களும் அப்பகுதியில் கூடினர்.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு முறையாக காவல்துறையினரிடம் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படும் நிலையில் அங்கு வந்த சிவகங்கை நகர் காவல்துறையினர் நிகழ்ச்சியினை தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து அங்குச் சாதனையைக் காணக் குவிந்த மக்கள் விரக்தியுடன் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:பேருந்தில் அத்துமீறிய நபர் - குண்டூசியால் குத்தி தட்டிக்கேட்ட பெண்!