சிவகங்கை: திருப்பத்தூர் அடுத்து கண்டரமாணிக்கம் கிராமத்தைச்சேர்ந்தவர், சின்னராஜா. எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் முழுநேரம் விவசாயியாக உள்ளார். விவசாயத்துடன் பால் மாடுகளும் வளர்த்து வருகிறார்.
இவரது பசுக்களை கன்று ஈனும் தருணத்தில் தோட்டத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். அதன்பின், கன்று ஈன்ற பிறகு, கன்றை வீட்டிற்குக்கொண்டு வந்து பராமரிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் ஒரு பசு மாடு தோட்டத்திலேயே அழகிய காளைக்கன்றினை ஈன்றது. அந்தப் பசுவினையும், கன்றையும் அன்று பகல் முழுவதும் அங்கேயே வைத்துப் பராமரித்தனர்.
அதனைத்தொடர்ந்து மாலையில் அங்கிருந்து தங்களது வீட்டில் உள்ளதொழுவத்திற்கு, பசு மற்றும் கன்றுக்குட்டியைக் கொண்டு செல்ல முயற்சி செய்தனர்.
கன்றுக்குட்டியால் நடக்க இயலவில்லை. இதன்பின், சின்னராஜாவின் தாய் அழகம்மையை காரின் டிக்கியில் கன்றுக்குட்டியுடன் உட்கார வைத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட முற்பட்டனர்.
தாய்ப்பாசத்துக்கு இணை எதுவுமில்லை
அதனைப்பார்த்த அந்த தாய்ப்பசு தனது கன்றுக்குட்டியை வேறு எங்கேயோ கொண்டு செல்ல முற்படுகிறார்கள் என்று எண்ணி, கன்றுக்குட்டியை ஏற்றிச்சென்ற வாகனத்தின் பின்னாலேயே ஓடத் தொடங்கியது.
சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை காரின் பின்னால் ஓடிய பசுவிற்கு பின்புதான் தெரிந்தது தனது வீட்டுக்குத்தான் கன்றுக்குட்டியைக் கொண்டு சென்றுள்ளனர் என்று.
இதை அறியாமல் தன் கன்றினை எங்கேயோ கடத்திச் செல்கிறார்கள் என்று அச்சத்துடன் ஓடிவந்தது.
பின்னர் கன்றுக்குட்டியைக் காரில் இருந்து இறக்கியதும் தாய்ப்பாசத்துடன் அரவணைத்தது. கன்றும் தாயுடன் கொஞ்சி குலாவியது.
மனிதர்களே இந்த விஞ்ஞான காலத்தில் பெற்றோரையும், குழந்தைகளையும் கைவிடும்பட்சத்தில் 5 அறிவு கொண்ட பசு ஒன்று, தனது கன்றை பிரித்துவிடுவார்களோ என்று சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஓடிய காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
தாய்ப்பாசத்துக்கு இணை எதுவுமில்லை என்பதை மெய்ப்பிக்கும் நிகழ்வாக, இந்த காட்சி திகழ்கின்றது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிப்பு