சிவகங்கை: 2007 திமுக ஆட்சியின்போது 100 நாள் வேலைத்திட்டத்தில் கணினி உதவியாளர்கள் வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் இட ஒதுக்கீட்டின்படி எழுத்து தேர்வு எழுதி பணியாளர்களாக தமிழ்நாடு முழுவதும் 906 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
அன்று முதல் இன்று வரை தற்காலிக பணியாளர்களாகவே பணிபுரிந்து வருகிறார்கள். பணி நிரந்தரம் செய்ய 2017இல் அரசாணை 37 பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஊரக வளர்ச்சித் துறை இழுத்தடிப்பு செய்து வந்தது.
இந்நிலையில் கணினி உதவியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் நேற்று முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் போராட்டம் நடத்தியவர்களில் நான்கு பேர் உடல் நலக்குறைவு காரணமாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை ஊரக வளர்ச்சி துறையின் நேர்முக உதவியாளர் வீரராகவன், சிவகங்கை வட்டாட்சியர் தங்கமணி, காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சமரசம் ஏற்படாததால் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்து சிவகங்கை சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: தாமல் ஏரியில் கலெக்டர் ஆய்வு - கிராமப்புற ஏரிகளை கண்காணிக்க குழு!