இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள உணவு பஞ்சம் காரணமாக இலங்கை மன்னார் மாவட்டத்திலிருந்து கைக்குழந்தைகள், பெண்குழந்தைகள், பெண்கள் உட்பட 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 நபர்கள் கொட்டும் மழையில் உயிரை பணயம் வைத்து பைபர் படகில் அகதிகளாக, நள்ளிரவில் தனுஷ்கோடி மணல் திட்டில் வந்து இறங்கினர். மேலும், அங்கு அவர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்துள்ளனர்.
இதையடுத்து, மேலும் இலங்கையிலிருந்து அகதிகளாக ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரைப்பகுதியில் பைபர் படகில் 5 பேர் வந்திறங்கினர். அனைவரையும் மெரைன் காவல்துறையினர் மீட்டு தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் உண்ண உணவு குழந்தைகளுக்கு பால் வாங்குவதற்குக் கூட வழியில்லாமல் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பல்வேறு கட்டங்களாக இதுவரை 59 பேர் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ளனர். இன்று(ஏப்ரல்.22) ஒரே நாளில் மட்டும் 18 பேர் அகதிகளாக தமிழ்நாடு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குழந்தை திருமணம் விழிப்புணர்வு நடவடிக்கை - மகளிர் உரிமைத் துறை!