திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில், குழந்தை சுஜித் திறந்து கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அரசு சார்பில் குழந்தையை உயிருடன் மீட்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதனையடுத்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூட அந்தந்தப் பகுதி மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் சேலம், மாவட்டத்தின் பிற பகுதிகளில் மூடப்படாமல் திறந்துகிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை உடனே மூடிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே ஆழ்துளைக் கிணறு ஒன்று மூடப்படாமல் இருக்கிறது. இதேபோல மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே பல ஆண்டாக மூடப்படாமல் கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூடிட வேண்டும். இதுவரை மூடாமல் மெத்தனப்போக்குடன் செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டி சேலத்தில் குழந்தைகள் பிரார்த்தனை!