சேலம் எருமைபாளையம் பைபாஸ் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பூஜை முடித்து பூசாரி கோயிலை நேற்று முன்தினம் மாலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர், நேற்று காலை வந்து பார்க்கையில் கதவு திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து பூசாரி கோயிலுக்குள் சென்று பார்த்தபோது மாரியம்மன் கழுத்தில் இருந்த தாலிக்கொடி காணாமல் போனது தெரிய வந்தது.
இதையடுத்து கிச்சிப்பாளையம் காவல் துறையினருக்கு அவர் தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதேபோல் அருகில் உள்ள மாரியம்மன், ஆனந்தாயி அம்மன் ஆகிய கோயில்களிலும் பூட்டை உடைத்து நகைகளையும், அதேபகுதியில் உள்ள கருப்பண்ணன் கோயில், நாகத்தம்மன் கோயில்களில், உண்டியலை உடைத்தும் அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரிந்தது.
இதுபற்றி கிச்சிப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.