சென்னை: தமிழ்நாட்டுக்கு 2025-26ஆம் ஆண்டுக்கு ரூ.9.37 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நபார்டு வங்கி சார்பில் மாநில கடன் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். முன்னுரிமைத் துறைகளான விவசாயம் குறு தொழில், கல்வி, வீடு உள்ளிட்ட துறைகளுக்கு மொத்த கடன் திட்ட அறிக்கை 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான "ஸ்டேட் போகஸ் பேப்பர் 2025-26" (STATE FOCUS PAPER) என்ற ஆங்கில ஆய்வு அறிக்கையை அமைச்சர் வெளியிட்டார். மேலும் 2025 - 26 ஆம் ஆண்டிற்கான மாநில வங்கி கடன் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.
28% ஜிடிபி பகிர்வு: இதனைத் தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "இந்தியாவிலேயே அதிகபட்சமாக 28% ஜிடிபி பகிர்வை தமிழ்நாடு கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டிற்காக முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 2024-2025 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.29,720 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நபார்டு வங்கியுடன் இணைந்து தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. வேளாண்மை, கால்நடை, சிறு குறு தொழில் ஆகியவற்றுக்காக அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது,"என்றார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் ஆனந்த், "நபார்டு வங்கி ஒவ்வொரு ஆண்டும் முன்னுரிமை துறைகளுக்கான கடன் ஆற்றல் திறனைத் தயாரித்து மாநில கடன் கருத்தரங்கில் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டுக்கான முன்னுரிமைத் துறைகளான விவசாயம் குறு தொழில், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு மொத்தக் கடன் திட்ட அறிக்கை நிதி அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது.
14 சதவீதம் அதிக கடன்: தமிழ்நாட்டிற்கு 2025-26 நிதியாண்டில் ரூ.9.37 லட்சம் கோடி கடன் திட்ட இலக்கை நபார்டு நிர்ணயத்திருக்கிறது. 2024-25 நிதியாண்டில் ரூ.8.35 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டவை விட இந்த ஆண்டு 14 சதவீதம் அதிகமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடனைத் திருப்பிச் செலுத்தக் கூடிய விகிதம் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் விவசாய நிலத்தின் அளவு குறையவில்லை. விவசாயத்துறையில் உற்பத்தியாக கூடிய அளவு அதிகரித்து இருக்கிறது. அதே போல் தமிழகத்தில் நீர்ப் பாசனம் போதுமான அளவுக்கு உள்ளது. சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் சதவீதம் அதிகரிக்கிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை கணினிமயமாக்கும் திட்டத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 4.500 க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன,"என்று கூறினார்.