சேலம்: விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வலியுறுத்தி விவசாயிகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கோரிக்கைகளை வைத்து போராடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு 42 ரூபாயும், எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு 51 ரூபாயும் தர வேண்டும், பிரதம பால் கூட்டுறவு சங்க பணியாளர்களை பணி வரன்முறை படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும் அரசு காப்பீடு திட்டத்தின் கீழ் அனைத்து கால்நடைகளுக்கும் இலவச காப்பீடு வழங்கிட வேண்டும். சங்கத்தின் பாலின் அளவு தரம் பரிசோதனை அடிப்படையில் ஒப்புகை சீட்டு வழங்கி பால் பணம் பட்டுவாடா செய்திட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பாஜக மொழி, மதத்தை வைத்து மக்களை பிளவுபடுத்துகிறது - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு